12.09.2020 அன்று ‚திரையும் உரையும் 2020‘ என்னும் நிகழ்வு யேர்மனியின் டோட்முண்ட் நகரில் நடைபெற்றது.

கடந்த 12.09.2020 சனிக்கிழமை அன்று ‚திரையும் உரையும் 2020‘ என்னும் நிகழ்வு யேர்மனியின் டோட்முண்ட் நகரில் நடைபெற்றது. சுஜித்ஜீ இயக்கிய ‚கடைசி தரிப்பிடம்‘ என்கின்ற முழுநீளப் படத்துடன் எனது இயக்கத்தில் வெளியான ‚துணை‘ குறும்படம் மற்றும் சுவிஸ் நாட்டில் தயாரிக்கப்பட்ட “Color separation” என்னும் குறும்படமும் திரையிடப்பட்டன.இவ்வாறு படங்களின் திரையிடலும் சினிமா குறித்த உரையாடல்களுமாக நிகழ்வு சிறப்பாக நடந்தது. இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், கதாசிரியர்கள், நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், சினிமா ஆர்வலர்கள் என்று பல்வேறு தரப்பட்டவர்கள் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள். நெதர்லாந்தில் இருந்து குணா கவியழகன், இங்கிலாந்தில் இருந்து பா. நடேசன் மற்றும் சேனன், யேர்மனியில் இருந்து வெற்றிமணி சிவகுமாரன், நெடுந்தீவு முகிலன் ஆகியோர் வெவ்வேறு தலைப்புகளில் உரையாற்றினார்கள்.சபையோர்களும் மிகக் காத்திரமான கருத்துகளை வழங்கினார். திரையிடப்பட்ட படங்கள் குறித்த தமது விமர்சனங்களையும் முன்வைத்தார்கள். ‚கடைசி தரிப்படம்‘ நீண்டு விட்டது என்பது பலருடைய கருத்தாக இருந்தது.சினிமாவை காட்சி ஆக்குதல், காட்சிகள் வெளிப்படுத்துகின்ற குறியீடுகள், கமெராக் கோணங்கள் போன்றவைகள் குறித்து வெற்றிமணி சிவகுமாரன் உரையாற்றினார். பழைய படங்களில் நாம் கற்றுக் கொள்வதற்கு நிறைய விடயங்கள் உண்டு என்று அவர் குறிப்பிட்டார். நெடுந்தீவு முகிலன் இன்றைய தொழில்நுட்பங்களை நாம் எப்படிப் பயன்படுத்தலாம் என்பது பற்றி பேசினார். சினிமாக் கலை திரையரங்குகளை விட்டு மெதுவாக வெளியேறிக் கொண்டிருப்பதாகவும், இதைக் கவனித்து, அதற்கேற்ற வழிமுறைகளை நாம் உருவாக்க வேண்டும் என்று கூறினார்.பா. நடேசன் ‚கடைசி தரிப்படம்‘ பற்றி வந்த விமர்சனங்களுக்கு பதில் அளித்துப் பேசினார். ‚துணை‘ குறும்படத்தில் வசனங்கள் அதிகரித்து விட்டன என்று குறிப்பிட்டார். இன்றைய காலத்தில் விமர்சன வடிவம் மாறி உள்ளது பற்றியும் பேசினார். விமர்சனங்களை படைப்பாளிகள் ஆரோக்கியமான முறையில் எதிர்கொள்வது இல்லை என்கின்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார். ஈழத் தமிழர்களின் சினிமா எதை நோக்கி நகர வேண்டும் என்பது பற்றி சேனன் உரையாற்றினார். தமிழ்நாட்டுச் சினிமாவின் தாக்கத்தில் இருந்து நாம் விடுபட்டு, வாழ்கின்ற நாடுகளின் சினிமாவில் இருந்து கற்றுக்கொள்ள பழக வேண்டும் என்று குறிப்பிட்டார். தமிழ்நாட்டு சினிமா இயக்குனர்களால் பேச முடியாத கதைகளையும், களங்களையும் காட்சப்படுத்துகின்ற வல்லதை ஈழத்து சினிமா இயக்குனர்களுக்கு உண்டு என்பதை சுட்டிக்காட்டினார்.குணா கவியழகன் ‚துணை‘ குறும்படம் பற்றி அதிகம் பேசினார். ‚துணை‘ குறும்படம் பேசுகின்ற பொருளை இன்றும் பேச வேண்டி இருப்பது பற்றிய வேதனை வெளிப்படுத்தினார். ஆனால் அடுத்த தலைமுறை இப்படி இருக்காது என்கின்ற நம்பிக்கையையும் அவர் தெரிவித்தார். ‚துணை‘ குறும்படம் பார்வையாளர்களை நீண்ட நேரம் ஏய்க்கிறது என்றும், இப்படி கதை சொல்கின்ற முறையை தான் ஏற்பது இல்லை என்றார். சிறுகதை எழுதுகின்ற சிலர் இந்தப் பாணியை கடைப்பிடிப்பதாகவும், அதையும் தான் ஏற்றுக் கொள்வது இல்லை என்றும் குறிப்பிட்டார். கதை நகர வேண்டிய தன்மைகள் குறித்து அவர் உரையாற்றினார்.ஒவ்வொரு உரை முடிந்ததும் பார்வையாளர்களின் கருத்துகள் இடம்பெற்றன. அவர்களிடம் இருந்து சினிமா குறித்த ஆழமான கருத்துகள் வெளிப்பட்டன. உரையாற்றியவர்களின் கருத்துகளுக்கு மாறுபாடான கருத்துகளும் அங்கே வந்தன.எனக்கு நிகழ்வு மிகுந்த திருப்தியை தந்தது. யேர்மனியில் சினிமா குறித்து ஆழமான உரையாடலை ஆரம்பித்து வைத்திருக்கிறோம். நிகழ்வுக்கு பலர் தொலை தூரத்தில் இருந்தும் வந்திருந்தார்கள். யேர்மனியில் தமிழர்களின் சினிமாத்துறை வளரும் என்கின்ற நம்பிக்கையை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது என்று பலர் குறிப்பிட்டார்கள். அடுத்து ஆண்டு ‚திரையும் உரையும் 2021‘ நிகழ்வை ஐரோப்பியரீதியிலான திரைப்பட விழாவாக நடத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்கள்.(பலருடைய படங்கள் கிடைக்கப் பெறவில்லை. சம்பந்தப்பட்டவர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்)