அமைதி…


ஆண்டுகளை
பின்நோக்கி
நகர்த்துகின்றேன்…
நிறுத்த முடியவில்லை
நினைவுகள் மனத்தில்
நகர்ந்திட கிடைப்பதோ
இனிய சுகம்….

மடியினில் கிடத்தி
தலையினைக் கோதி
தன் சுமை மறந்து
என் குறை களைந்திட
மனச் சுமையை
பரிவுடன் பகிர்ந்து
பொறுப்பினையூட்டியவள்..

தவறுகள் அறிந்தும்
தண்டிக்க வழியிருந்தும்
தந்தையில்லா தனயனெனை
தட்டிக் கொடுத்த படி
கெட்டித் தனங்களை
சுட்டிக் காட்டியவள்…

அடுத்தவன் பிள்ளையுடன்
ஒப்பீடு ஓதாமல்
உன்னைப் போல்
ஒரு பிள்ளை இனி
இங்கில்லையென
இங்கிதமாய் உரைத்தவள்..

அம்மாவின் மடி
பாவங்களை மன்னிக்கும்
புண்ணிய ஸ்தலம்
ஆனந்த சன்னிதி
அழகான நீரோடை
அமைதியான பூங்கா
அனுபவித்தவன் அறிவான்..

கவிஞர் ரி.தயாநிதி