ஆச்சரியத்துடன் காத்திருப்பு

எதுவும் புரிபடாமல்
குழப்பத்தில் இருக்கிறேன்
போதி மரத்தை
கண்டடையாத
புத்தனைப் போல

உண்மைகள்
பொய்களாகவும்
பொய்கள்
உண்மைகளாகவும்
பிரதிபலிக்கும்
கருத்தியல் மோதல்களில்
கானாமல் போகின்றன
மனித முகங்கள்

குரங்குகளின் கைகளில்
பொம்மைகளாகிப் போன
அதிகாரப் பரவலில்
ஆட்டு மந்தைகளாய்
பின் தொடர்கிறோம்
பலிபீடம் நோக்கி

எந்தத் துயரமும்
எங்களைத் துன்புறுத்துவதில்லை
ஏனெனில்
நாங்கள்
அமலா பாலின்
அம்மனநடிப்பின்
பரபரப்புச் செய்தியில்
மழுங்கடிக்கப்படுவதால்

அமில கழிவுகள்
ஆபத்தில்லை என்ற
வேதாந்தாக்களின்
எச்சில் துண்டுகள்
எங்களை விழுங்கினாலும்
கவலையில்லை
நாங்கள்
பிக்பாஸ்களில்
மகிழந்து தொலைவோம்

இன்னும்
விழித்துக் கொண்டே தான்
இருக்கிறோம்
காலி குடங்களுடன்
இரவு முழுவதும்

எப்போதும் போல
பொழுது விடிகிறது
எல்லாவற்றையும்
மறந்துவிட்டு 
தேடத் தொடங்குகிறோம்
அடுத்து என்ன என்ற
ஆச்சரியக் குறியோடு
ஆகவே
நான் எதுவும் புரிபடாமல்
குழப்பத்தில் இருக்கிறேன்

புதிய நந்தவனம் சந்திரசேகரன்