ஒருசில ஊடகங்களுக்கு மட்டும்.–வன்னியூர் செந்தூரன்–

வன்னியின் அடிமுடி கூட அறியாத
பொன்னியின் செல்வப் புதல்வர்களே
பேனாவால் புதுயுகமெழுதிய வரலாற்றை
தீமுனையில் தீட்டாக்க முனையாதீர்

உங்களுக்கு செய்தி வேண்டுமென்பதும்
விளம்பரம் வேண்டுமென்பதும் அறிவோம்
இறுதியுத்தகளம் கண்டவரின் ஆத்மாவை
அடியோடு சிதைக்கும் உம் ஆற்றல் என்றும் கனவே

பிரபாகரன் என்ற பெயரை எழுதமுன்
பலமுறை உங்களுக்குள் உங்களைத் தேடுங்கள்
கற்பனைக்கதைகளை காவாலித்தனமாய் எழுதி
காவியத்தைக் கரைத்து வடைசுட எண்ணாதீர்

அவர் என்றும் தமிழின் ஆத்மாவாய் வாழ்பவர்
அவர் இருக்கலாம் அல்லது இறந்திருக்கலாம்
ஆனால் என் இனத்தின் இறுதி மனிதனில் கூட
ஆழமாய் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார் அறியும்

சன்னச்சத்தமே கேட்டறியாக் காதுகளெல்லாம்
ஆட்லறியாய் முழங்குவதைக் கேட்டேன்
அண்ணனின் அருமையறியா எருமைகள் அடிக்கடி
புலிவேசம் போட்டாலும் காடு என்றும் ஏற்காதப்பா

இரண்டாயிரத்தெட்டிலே அவருக்கு தெரியும் முடிவு
இறுதியுரையின் தீர்க்கதரிசனத்தைக் மீட்டும் கேளும்
உறுதிபட உரைத்தாரே எம் தாயகத்தின் அப்பா
தலைவனற்ற சமூகமது தத்தளிக்குமென்பது நியதி

அத்தனை நாடுகளெமை அழித்ததென்பதை விட
எம்மை நாமே அழித்தோமென்பதே நிதர்சனம்
ஒற்றுமை என்று தகர்க்கப்பட்டு பதவி மோகமிட்டதோ
அன்றே எம் மரணப்பத்திரங்கள் எழுதப்பட்டுவிட்டது

தற்கொலைப்படையின் தார்மீகத்தையும் தகர்த்து
வென்றுநின்றது துரோகத்தின் கோட்டைமதில்கள்
கருணாவை மட்டும் துரோகியென்று கூறமுடியாது
அடையாளமற்றோர் ஏராளம் நிலத்திலும் புலத்திலும்

பரபரப்பான தலைப்பிட்டு பழையதையே பிரசுப்பது
பாழ்பட்ட ஊடகங்கள் சிலவற்றின் பிழைப்பானதே
சொத்துக்களை முடக்கி வாழும் தேசப்பற்றாளர்களே
செயலில் காட்டுங்கள் உங்கள் கொள்கை நேசத்தை

ஒன்றுமட்டும் உலகத்தில் பொதுவானது
சோழக்கொடிபறந்த ஈழமண்ணின் தியாகங்களோ
தீர்வற்றுப் போவதற்கு வாய்ப்பில்லை என்றும்
ஊர்க்கோடியில் செங்கொடி சிரிக்கும் என்றாவது
அன்று குற்றஉணர்வுகளே கொன்றிருக்கும் உங்களை
–வன்னியூர் செந்தூரன்–