முள்ளிவாய்க்கால் மண்ணே நந்திக்கடலே…

ஆண்டுகள் பல கடந்தும்
ஆறாத்துயரோடு
கண்ணீரிலே விளக்கேற்ற
உறவுகள் வருவார்கள்…

வைகாசி 18 இல்
வழிமேல் விழிவைத்திருங்கள்
வாடிய முகத்தோடு
விரைந்து வருவார்கள் 
விழிமூடித்தூங்கும்
தங்கள் உறவுகளைக்காண…

செங்குருதியில் தோய்ந்த
உந்தன் மேனிக்குக் கண்ணீரால்
கடமை செய்ய
கணப்பொழுதில் வருவார்கள்…

உறவுகளை இழந்த உள்ளங்கள்
உறங்கிக்கிடக்குமா
அணைபோட்டுத்தடுத்தாலும்
மடைதிறந்து வருவார்கள்…

நந்திக்கடலே நட்பின் சிகரமே
உன்னில் கலந்திருப்பது
எங்கள் கண்ணீரும்தான்
என்றுமே வற்றாதது
நீ மட்டுமல் 
எமக்குள் இருக்கும் 
நினைவுகளும் தான்…

விதையாகிப்போன சொந்தங்களே
விழிதிறந்து பாருங்கள் 
உற்றார் உறவுகள் 
ஊர்களே வருகின்றன
விளக்கேற்றி உமை வணங்கி 
விழிநீரால் அஞ்சலிசெய்ய…

வலிகள் சுமந்த வரிகளுடன்…
ஈசன் சரண்.