வாள் பாடிகள்.


இசையால்
வசமாக்கி
இதயம் நெகிழும்
பாடலால்
பாணண் பெற்று
உயிர்த்த பூமி
யாழ்ப்பாணம்….

யாழ்ப்பாணம்
வரவேற்கும் எனும்
பதாதைகளால்
உள்ளூர ஆனந்தம்
கனதியான கர்வம்
கலைஞர்களால்
மெருகுற்ற தேசம்…

இன்று பொருள்
இடம் மாறி
கொலைஞர்களின்
முற்றுகைக்குள்
வாள்ப் பாணமாகியதே..
குரோத வெறியின்
கோரத் தாண்டவம்….

காப்பரண்கள்
காணாமல் போனதாலே
கரப்பான் பூச்சிகளுக்கும்
குளிர் விட்டுப் போனதுவோ
நாட்டாமை கூடி நடுவீட்டில்
நாட்டியமாடுகின்றதோ…

விடுதலைத் தேர்
நகர்ந்த புண்ணிய
வீதிகளில் வீணர்களின்
தறுதலையாட்டங்களோ
ஆட்சியாளர்களின்
தந்திரங்களால்
மந்திரித்த மந்தைகளே
சொந்த மண்ணில்
வெந்த மனங்களை
வாழ வழி செய்யுங்கள்.

 

கவிஞர்ரி.தயாநிதி