உனக்கு_நான்_அந்நியமாகிவிட்டேன்

சாளரங்களை திறந்துவருகிற மழைத்துளிகள் போல
அத்துமீறி நுழைந்த உன்னை ஆராதித்திருந்தேன்
எல்லா புன்னகைகளையும்
எல்லா நேசங்களையும்
எல்லா இரகசியங்களையும்
நீ திருடுவதற்காகவே சேமித்ததைப்போல
தாரைவார்த்திருக்கிறேன்
ஒரு காலத்தின் குளிரை கடப்பதற்கு
ஆடைகளை தயார் செய்வதைப்போல
நேசங்களின் தாக்குதல்களை
எதிர்கொள்ள நான் கற்றுத் தெரிந்திருக்கவில்லை
நேசமென்பதொரு சொல்
அந்தச் சொற்களை அப்பியிருக்கிற
முகங்களோடு
நிறைந்த அமுதக் கடலென ஆற்பரிக்கும்
ஆத்மார்த்த காதல்
நெருக்கம் கொள்ள அவாவுற்று
நொதித்துப்போய்விடுகிறது
நீ சொல்லிச் சென்ற வார்த்தைகளுக்குள்
எங்காவதொரு உண்மை இருக்குமா என
நான் தேடிப்பார்க்கிறேன்
அத்தனை அழகாய் ஒரு மாயத்தை
நிகழ்த்துவது பற்றி நீ எங்கிருந்து
கற்றுக்கொண்டாய்
யாரோ ஒருவரை கடக்கும் போது
உன் அகண்ட விழிகள் அச்சமூட்டுகிறது
என்னை நோக்கிவருகிற புன்னகைகளை
அத்துனை அச்சத்தோடு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது
யாரோ ஒருவரை தேடிச்செல்லும் போது
உன் நெருக்கங்கள் நிகழ்த்திய
பெருவலி தடுத்துவிடுகிறது
இருந்தும் ஒரே இடத்தில் அமர்ந்திருப்பதால்
வாழ்க்கை எதையும் எனக்கு தரப்போவதில்லை
என்பதை நான் அறிய முற்பட்டிருக்கிறேன்
எல்லாவற்றையும் ஒரு காற்றைப்போல
சடுதியாய் நிகழ்த்திவிட்டு
ஏதும் நிகழாதது போல நீ
அங்கேதான் இருக்கிறாய்
ஒரு அந்நிய பெண்ணைப்போல
நான் உன்னை கடக்கிறேன்
#அனாதியன்