குவலையத்தில்..!


குற்றுயிராய்
ஒரு தேசம்.
உற்று நோக்கி
சற்றேனும்
நிதானமின்றி
உயிரழிவுக்கு
உடந்தையானது
உருப்படா உலகம்…!

விழுதலும்
எழுதலும் எங்கும்
இயல்பு நிலை..
அழுகை கலைத்து
எழுகை ஒன்றே
தீர்வு நிலை…
தாழ்வு நிலை
தளர்வு நிலை
துடைத்து எழு..!

சேரா நிலை
விடுத்து நீயாக
சேர்ந்த நிலையில்
உறுதி நிலையோடு
உறங்கு நிலை
தவிர்த்து தமிழன்
வீர நிலையுடன்
நிமிர் நிலை காண்.
திமிர் நிலை
கலைத்திட திட
நிலை கொண்டெழு.!

குருதி நிரம்பிய
குவலயத்தில்
கண்ணீர் கலசம்
உடை பட எழு
படை பல கண்ட
பரம்பரை நீ
தடை பல எடு பட
ஒற்றுமை சுடரினை
ஏற்று. விடியலின்
விடையை தொடுவாய்..

ஆக்கம் கவிஞர் தயாநிதி