முல்லைத்தீவில் இடம்பெற்ற தரங்கிணி எழுதிய ‚உயிரோடி‘ கவிதை நூல் அறிமுக விழா.

ஈழத்தில் புகழ்பெற்ற போர்க்காலக் கவிஞரும், கலைஞரும், எழுத்தாளருமாகிய மறைந்த நாவண்ணன் அவர்களின் புதல்வி தரங்கிணி எழுதிய ‚உயிரோடி‘ கவிதை நூலின் அறிமுக விழாவானது 11.12.2017 திங்கட்கிழமை பிற்பகல் 03.00 மணிக்கு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.

நிகழ்வுக்கு ஒட்டுசுட்டான் பிரதேச இந்து கலாசார உத்தியோகத்தர் சி.மோகனராசா தலைமை வகித்தார். சுடர்கள் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து தமிழ்மொழி வாழ்த்தினை வற்றாப்பளை மகா வித்தியாலய பிரதி அதிபர் திருமதி கமலகாந்தன் இசைத்தார்.வரவேற்புரையினை கரைதுறைபற்று பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் செல்வராணி சிவாலன் வழங்கினார். ஆசியுரையினை ஆரோபனம் இயக்குநர் அருட்பணி யூட் அமலதாஸ் வழங்கினார். வாழ்த்துரைகளை மூத்த கலைஞர் முல்லை ஜேசுதாஸ்,ஆசிரியை திருமதி அகிலா, முள்ளியவளை கலைமகள் வித்தியாலய அதிபர் கமலகாந்தன் ஆகியோர் வழங்கினர்.

நூலினை நிகழ்வின் பிரதம விருந்தினர் கரைதுறைபற்று பிரதேச செயலர் சி.குணபாலன் அறிமுக வெளியீடு செய்ய முதலாவது பிரதியினை ஓய்வுபெற்ற திட்டமிடல் பிரதிக் கல்விப்பணிப்பாளர் உதயசங்கர் பெற்றுக்கொண்டார். நூல் பற்றிய கருத்துரையை ஈழத்தின் போர்க்காலத்துப் படைப்பாளியாக மிளிர்ந்தவர்களில் ஒருவரான மணலாறு விஜயன் வழங்கினார். நூல் பற்றிய பகிர்வுகளை கலாபூசணம் நடராஜா இராமநாதன், யோ.புரட்சி ஆகியோர் நிகழ்த்தினர்.

பிரதம விருந்தினர் உரையைத் தொடர்ந்து நூலாசிரியர் தரங்கினி கெளரவிக்கப்பட்டார். ஏற்புரையினை நூலாசிரியர் தரங்கிணி வழங்கினார். நன்றியுரையினை முள்ளியவளை கலைமகள் வித்தியாலய அதிபர் கமலகாந்தன் வழங்கினார்.

ஈழத்து இலக்கியப் பரப்பில் தவிர்க்கமுடியாத பதிவுகளை ஏற்படுத்திய கவிஞர் நாவண்ணன் அவர்கள் குறித்தும் இன்றைய நிகழ்வில் அதிகம் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தரங்கினி அவர்கள் எழுதிய முதலாவது கவிதை நூல் இதுவாகும்.

இவ்வறிமுக நிகழ்வினை கரைதுறைப்பற்று பிரதே கலாசார பேரவை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.