ஆடல்கலாலய “ பரதநாட்டியக்கல்லூரி 30வது ஆண்டின் பெருவிழா!!!! சிறப்பாக நடைபெற்றது

கடந்த 21.12.2019 (சனிக்கிழமை) யேர்மனி „ஆடற்கலாலய“ 30வது ஆண்டு நிறைவுவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்வின் பிரதம அதிதியாக சென்னை கலாஷேஸ்திர முதல்தர பட்டதாரி மாணவியும், இலங்கை,யேர்மனி சிவசக்தி நர்த்தன ஷேஸ்திரா நாட்டியப்பள்ளி இயக்குனருமான ஸ்ரீமதி.ரிசாந்தினி சஞ்ஜீவன் அவர்களும், சிறப்பு விருந்தினராக இந்திய சினிமா நடிகையும், பரதநாட்டிய கலைஞருமான ஸ்ரீமதி. ருக்மணி விஜயகுமார் அவர்களும் கலந்து கொண்டார்கள். பி.ப 2.30 மணியளவில் மங்கள விளக்கேற்றல், தேவாரம், அகவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமானது.

கணபதி ஸ்துதி,புஸ்பாஞ்சலி,குரு சமர்ப்பணம், அலாரிப்பு, திருப்புகழ், விநாயகர்கௌத்துவம், சரஸ்வதி ஸ்துதி,பாரதியார்பாடல், ஐதீஸ்வரம், தேவாரம் என அரங்கை ஒவ்வொரு உருப்படிகளும் அதிரவைத்தமை மண்டம் நிறைந்த அறுநூறுக்கு மேற்ப்பட்ட பார்வையாளர்களின் மகிழ்ச்சி பொங்கிய கைதட்டல் சாட்சிபகின்றது. தொடர்ந்து வெற்றிமணி ஆசிரியர் திரு.மு.க.சு.சிவகுமாரன் அவர்கள் ஆசியுரை வழங்கினார். 1997ம் ஆண்டு தொடக்கம் 2019ம் ஆண்டுவரை ஆடற்கலாலயம் ஊடாக பயின்று அரங்கேற்றம் கண்ட மாணவர்களுக்கும் 2020 -2021 அரங்கேற்றம் காணப்போகும் மாணவர்களுக்கும் ஆடல்கலாலய அதிபர் ஸ்ரீமதி. றெஜினி சத்தியகுமார் அவர்களினால் மதிப்பளிப்பு நடைபெற்றது. மீண்டும் அரங்கு அதிர ஆரம்பித்தது.

வர்ணம் (இராமன் மேல் அனுமான் பக்தி) , பதம் ,பாரதி பாடல் (சின்னஞ்சிறு கிளி) ஆகிய நடனங்களும், அதற்கு சிறப்பான பாடல்களும், பக்கவாத்திய கலைஞர்களின் அதிசிறப்பான இசையும் பலரையும் கண்மூடி இறைசிந்தனைக்கு கொண்டு சென்றது. பரத மங்கைகளின் உடையும் ,நேர்த்தியான ஆடல்களும் நிகழ்வை சொர்க்கலோகமாக காட்சியளித்தது.அதைவிட குழந்தை நட்ச்சத்திரங்களின் நடனம் பலரை எழுந்து கைதட்ட வைத்தமை சிறப்பே.நடனத்தில் பல தெய்வரூபங்கள் கண்முன்னே வந்தமை பாராட்டி மகிழவேண்டியதே.அணிசேர் கலைஞர்களாக நட்டுவாங்கம் ஸ்ரீமதி.றெஜினி சத்தியகுமார்,ஸ்ரீமான்.நிமலன் சத்தியகுமார், ஸ்ரீமதி.தீபனா தர்மபாலன், ஸ்ரீமதி.தர்சிகா சுதர்சன் ஆகியோரும் பாட்டு திரு.நீருஜன் செகஜோதி,செல்வி.தாரணி சாந்தரூபன், திருமதி.சுபோசினி பாலமுரளி ஆகியோரும் வயலின் திரு.பிரசாந் பரமேஸ்வரன், மிருதங்கம் திரு. லகீபன் தர்மபாலன்,புல்லாங்குழல் திரு.வர்ணன் சுரேஸ்குமார் அவர்களும் மிக கச்சிதமாக நிகழ்வை நகர்த்தினார்கள்.

தொடர்ந்து „கவிமாமணி“கி.த.குகதாஸ் அவர்களின் வாழ்த்துரை சிறப்பாக அமைய. சுத்தநிருத்தம் (மிருதங்கத்துடன் தாளகட்டுப்பாட்டுடன் ஆடுதல்) மிக அருமையாக சிறப்புச்சேர்த்தது. தொடர்ந்து ஆண்டாள் நடனம், அனுமான் நடனம், கற்பகவல்லி கீர்தனம் , கோலாட்டம், என பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைத்த நிகழ்வாக அமையப்பெற்றது. நிகழ்வின் பிரதான அனுசரணையாளர் திரு.தனீஸ்வரன் ஞானேஸ்வரன் அவர்களின் சிறப்புரை இளம்சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்களை பகிர்ந்தமை சிறப்பே. தொடர்ந்து கீர்த்தனம் ( சிவனின் நவரசநிலை) பாம்பு நடனம், பதம், தொடர பிரதம விருந்தினர் உரை சிறப்புரையாக அமைந்தது. மீண்டும் அரங்கை தில்லான தனிச்சிறப்பான நடனமாக அமைய, பக்கவாத்திய கலைஞர்களுக்கான கௌரவிப்பினை திரு.மாவை.தங்கராசா அவர்கள் வழங்கினர். வாழ்த்துரையினை சங்கீத ஆசிரியர் திருமதி.மீரா நித்தியானந்தன் அவர்கள் நிகழ்த்த. மீண்டும் பார்வையாளர்களின் கைதட்டலுடன் நாட்டிய நாடகம் சிறப்புச்சேர்த்தது. நன்றியுரையினை திருவாளர்.சத்தியசீலன் சத்தியகுமார் அவர்கள் அனைவருக்கும் நன்றிகூறி மங்களத்துடன் விழா 11.30 மணியளவில் நிறைவுகண்டது. முக்கியமாக நேரக்கட்டுப்பாடு இவ்விழாவில் பாராட்ட வேண்டிய விடயமே. இவ் அனைத்து நிகழ்வுகளையும் இளம் அறிவிப்பாளர்களாகிய திரு. ராமேஸ் ஜெயக்குமார் மற்றும் செல்வி.லக்சனா தர்மபாலன் ஆகியோர் மிக சிறப்பாக தொகுத்து வழங்கினார்கள்…..