ஆழிப்பேரலையே…..

அழகை ரசித்து
அகம் மகிழ்ந்து
அள்ளி விளையாடிய
அழகிய அலையே
அன்பில் தாயென
நினைத்திருந்தோம்…….

மறத்தமிழின்
மேன்மையெல்லாம் கண்டு
செற்றவர் அடக்கிய
செம்புலம் நீ என
பெருமை நாம்
கொண்டிருந்தோம்…..

அத்தனையும்
ஒருநொடியில்
மறந்தே
எம்மவர் இழந்தது
போதாதென்று
அகோரத்தாண்டவம்
நீயுமாடி எம்மவர்
செம்புனலில் மூழ்கி
உடல்களை சிதைத்து
விழுங்கினாய்…..

பெற்றார் உற்றார்
நடு நடுங்க
நட்டநிசியில்
பச்சிளங்குழந்தைகளையும்
பாரபட்சமின்றி
பேயாகி வந்து
காவு கொண்டாய்…..

எம்மவர் செந்நீரில்
செழுமை கண்டநீ
அவர்களின் ஆத்மா
சாந்தி பெற
அமைதியாகு
பொறுமையாகு
இன்றாவது
ஒருநாள்….

&&ரதிமோகன்&&&
&&&ஓயாதகவியலைகள்&&&
மீள்பதிவு
குறிப்பு… செற்றவர்-பகைவர்
செம்புனல், செந்நீர்-குருதி
செம்புலம்-போர்க்களம்

ஆக்கம் ரதிமோகன்