இருப்புக்குள் உனை தேடி!கவிதை சுதாகரன் சுதர்சன்

 

 

இருண்டு போன உலகில்
வாழ்வதாய் எனையே
நொந்த காலங்கள்
ஆயிரம்
ஆனால் உன் இருப்பு
நிரந்தரம் என்பதை
நான் அறியாத
மூடனானேன்
என்னோடு ஒட்டிப்பிறந்த
குழந்தை போல்
பிரியாமல்
இருப்பதாய்
அறியவில்லை தான்
ஆலம் பாலில்
பல் தேய்த்து
வெண்மை கொண்ட
உன் பற்கள்
மட்டுமே வெண்மை
மற்றெதெல்லாம்
கருமையான
கும்மிருட்டு அதுதான்
ஏனோ
என் அக்காலத்தில்
நேராக பதிலுரைப்பாய்
தற்காலத்தில் ஏன்
எனையே தேட
வைக்கிறாய்
இறப்பில் உனக்கு
அவ்வளவு பிரியமா
அதிலும் என்
ரணமான இறப்பில்
அலாதி இன்பமா சொல்
தசைகளை
மென்று விட துடிக்கும்
உனை கேட்கிறேன்
என்புகளையும்
சுவைத்து பார்
எதுகை மோனைகளின்
இடர்கள் புரியும்
இட்டதெல்லாம்
இடுகையாக
நிலை நிறுத்த
எனை பக்குவாக்க
தவிக்கும் போதெல்லாம்
நீதான் எனக்கு
முதல் தடை
இருந்தும்
கேட்டேனா
ஐயகோ!
உனக்கு எங்கே
புரியப்போகிறது
நீ தான் என்
நினைவாயிற்றே
விம்பம் இல்லா
நிழலிடம்
உரைத்து என்ன
பயன் இருந்தும்
நீ மட்டுமே என்னுள்
நிரந்தர இருப்பானாய்
நினைவே…

ஆக்கம் சுதாகரன் சுதர்சன்