ஈழத்துக் கலைஞர்களால் உருவாக்கப்பட்ட ‚காற்றுவெளியிசை‘ இறுவட்டு ஜேர்மனியில் வெளியிடப்பட்டது.

முப்பது ஈழத்துக் கலைஞர்களின் ஒருங்கிணைந்த முயற்சியில் உருவாக்கப்பட்ட ‚காற்றுவெளியிசை‘ எனும் காதற்பாடல்களைக் கொண்ட இறுவட்டு வெளியீட்டு விழாவானது, 15.06.2019 சனிக்கிழமை மாலை 04.00 மணிக்கு ஜேர்மனி தேசத்தின் டோர்ட்மோன்ட் ஆரம்பமானது. தொடக்க நிகழ்ச்சியாக மங்கல விளக்கேற்றல் இடம்பெற்றது. மங்கல விளக்கினை நிகழ்வுக்கு அனுசரணை வழங்கிய வணிக மற்றும் ஊடக நிறுவனங்களைச் சார்ந்தவர்கள் ஏற்றி வைத்தார்கள். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் செய்யப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகின.

மாவீரர் வணக்க நடனத்தை ஜேர்மனியின் இளைய கலைஞராகிய அனாமிகா வழங்கினார். தொடர்ந்து ‚காற்றுவெளியிசை‘ இறுவட்டின் பாடலாசிரியர்களில் ஒருவரான தூயவன் வரவேற்புரையை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இசை வணக்க நிகழ்வும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

தொடர்ந்து ‚காற்றுவெளியிசை‘ இறுவட்டின் வெளியீட்டு விழா ஒருங்கிணைப்பாளர் இரத்தினம் கவிமகன் இவ்விறுவட்டு எவ்வாறு உருவாகியது அதற்காக தாம் எவ்வாறான அனுபவங்களை, தடைகளை பெற்றிருந்தார்கள். இதன் பெறுபேறு என்ன போன்ற விடயங்களை தனது அறிமுக உரையில் தெளிவுபடுத்தினார்.

‚காற்றுவெளியிசை‘ என்பது தொட்டு விட முடியாத இந்த அண்டத்தில் கலந்திருக்கும் ஐம்பூதங்களில் ஒன்றான காற்றில் எம்மால் பலவற்றை உணரக் கூடியது போல இக் காற்றுவெளியிசை இறுவட்டினூடாகவும் இசை ரசிகர்கள் பல உணர்வுகளை பெறக் கூடியதாக பாடல்கள் உருவாகி உள்ளன எனவும் இதன் நோக்கம் இலைமறை காயாக இருக்கும் தமிழீழ கலைஞர்களுக்கான சந்தர்ப்பங்களை கொடுப்பது என்பதால் புதியவர்கள் பலரை இதில் இணைத்துள்ளதாகவும் அதனை சரியான முறையில் இசையமைப்பாளர் இரா. சேகர் அவர்கள் செய்துள்ளார் எனவும் தனதுரையில் தெரிவித்தார்.

தொடர்ந்து வெளியீட்டுரையினை முன்னாள் போராளியும் மக்கள் செயற்பாட்டாளருமான திரு. ராஜன் அவர்கள் வழங்கினார். அவர் தனதுரையில், படைப்பாளிகள் பல சிரமங்களை எதிர் கொண்டுதான் இவ்வாறான படைப்புக்களை கொண்டு வருகின்றார்கள். அவ்வகையான படைப்புக்களை எம் மக்கள் வரவேற்று அவர்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் இல்லை என்றால் மீண்டும் மீண்டும் முயற்சிகளில் மட்டுமே படைப்பாளர்கள் முடக்கப்பட்டுவிடுவார்கள். பல வெற்றிடங்கள் இந்த மண்டபத்தில் இருக்கின்றது. ஆனால் இனிவரும் காலத்தில் அவ்வாறு வெற்றிடங்கள் இல்லாமல் நிறைவானதாக இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டியது மக்களாகிய எமது கடமை என்றார்.

வெளியீட்டுரையைத் தொடர்ந்து காற்றுவெளியிசை இறுவட்டு பாடல் ஒன்றுக்கு இளைய நடனக் கலைஞர் அனாமிகா நடனம் வழங்கினார். அதனைத் தொடர்ந்து வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இறுவட்டு வெளியீட்டினை சிறப்பு அழைப்பாளராக வருகு தந்திருந்த மூத்த இசையமைப்பாளர் கண்ணன் அவர்கள் வெளியிட்டுவைக்க நிகழ்வின் பிரதான அனுசரணையாளரான நெதர்லாந்தைச் சேர்ந்த மூத்த நாடக கலைஞரான சிறீஸ்கந்தவேள் முதற்பிரதியினைப் பெற்றுக் கொண்டார். அதனைத் தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. சிறப்புப் பிரதிகளை வருகையாளர்களுக்கு இசையமைப்பாளர் கண்ணன் மற்றும் இசையமைப்பாளர் இரா. சேகர் ஆகியோர் வழங்கினர். சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து கலந்துகொண்டோருக்கான பிரதிகள் வழங்கப்பட்டன.

மதிப்பீட்டுரையினை பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்திருந்த சத்தியநாதன் நிகழ்த்தினார். அவ்வுரையில், படைப்பாளிகள் பெரும் எதிர்பார்ப்போடு ஒவ்வொரு படைப்புக்களையும் செய்கிறார்கள் அதிலும் இப்படைப்பு இந்திய சினிமா மோகத்துக்குள் இருந்து வெளிவந்து தனித்துவமான படைப்பாக வந்துள்ளது. அவ்வகையில் இப்படைப்புக்களுக்கு சிறந்த வரவேற்பை மக்கள் கொடுக்க வேண்டும் என வேண்டுகை விடுத்தார்.

தொடர்ந்து நெதர்லான்ட் நாட்டில் இருந்து வந்திருந்த சிலம்பொலி கலாஷேத்ரா நடன பள்ளியின் மாணவிகள் மற்றும் Beatz Dance School மற்றும் தமிழ் அரங்கம் கலைக்கூட மாணவிகளின் சிறப்பான நடனங்கள் மற்றும் இரா. சேகர் அவர்களின் ஒருங்கிணைப்பிலும் தாளவாத்திய கலைஞர் தேவகுருபரன் அவர்களின் நெறிப்படுத்தலிலும் இயங்கிய இசையணியின் இசை நிகழ்வும் இடம்பெற்றன. நிகழ்ச்சிகளை மூத்த அறிவிப்பாளர் முல்லைமோகன், அறிவிப்பாளர் கிருஷ்ணா ஆகியோர் தொகுத்து வழங்கினார்கள். நிகழ்வுகள் ஆரம்பித்திருந்த நேரம் முதல் இறுதிவரை பங்குபற்றிய அனைத்து கலைஞர்களுக்கான மதிப்பளித்தல் இடம்பெற்றது. தொடர்ந்து நன்றியுரை இடம்பெற்றது.

‚காற்றுவெளியிசை‘ இறுவட்டிற்கு நெதர்லாந்தில் வசிக்கும் ஈழத்து இசையமைப்பாளர் இரா.சேகர் அவர்கள் இசையமைப்புச் செய்திருக்கின்றார்.