என்னை விட்டு விடு

பொல்லாத பூமியில் பிறந்தது பாவம்
பொறுத்து பொறுத்து வாழ்வதும் பாவம்
வாதும்சூதும் பொய்யும் புரளியும் 
விதைத்த பூமியில் வதைபடுவதும் துன்பம்

விலையற்ற அன்புக்கு விலைபேசியும்
வில்லத்தனமும் வில்லங்கமும் கொண்டு
உயிர்கொன்று உணவுண்டு மதவெறியில்
இனவெறியில் இடர்படும் இந்த மனித
வாழ்க்கையில் ஏது இன்பம் ..?

வரட்டு கௌரவமும் வீராப்பும் கொண்டு
வீணாகும் வாழ்நாட்களை எண்ணியதுண்டா
விதண்டாவாதத்தில் வெட்டிப்பேச்சிலும்
மகிழ்வதில் போதைமனிதருக்குள் ஏது இன்பம்.?

போதுமடா இந்த வாழ்க்கை பொங்கும் மனதில் மோதி
புரையேறிய எண்ணங்களில் பூசிய சந்தனமாய் மணக்கிறது..
அண்டவெளிதொட்ட கனவுகளில் ஒரு உலகம்
அங்கே வாழ்ந்திட என்னை விட்டுவிடு

தனிமையில் இனிமை காண வேண்டும்
இருளாத அவ் உலகத்தில்
இளைப்பாற இடம் வேண்டும்..
மனம்விட்டுப் பேச மனிதரில்லா தேசம்
வேண்டும்..

மொத்தத்தில் புதிதான உலகு வேண்டும்
அதில் புதிராக புரியாத புதுமைகள் 
மலர வேண்டும்
பாக்களோடு பூக்களோடு வாழ வேண்டும்
என்னை விட்டு விடு ..என்பயணம் தொடரவிடு..

ரதிமோகன்