ஏட்டினில் தானோ !கவித்தென்றல்

பாடம் படிக்க புத்தகம்
சுமக்கும் பருவத்திலே
ஒரு பாவம் பாரம் சுமக்கிறது
பசியின் உருவத்திலே..

பாழாப் போகிறது
சிறுவர் கல்வி கலிகாலத்திலே..
பாடசாலை பாதையறியாது
பிள்ளை வளருது உலகத்திலே…

குடம் நீர் தான் ஒரு வேளை
குடல் வளர்க்கும் ஏழைகளின் உணவோ..
குழந்தைகள் எதிர்காலம்
குழி தோண்டி புதைந்திடும் கனவோ

பாரதி சொன்ன
பாடல்களெல்லாம் ஏட்டினில் தானோ
பாரினில் ஏழைகள் கல்வி ஏளனம் தானோ

பழமொழி சொல்லிப் பாடியதெல்லாம்
பாடம் புத்தகத்தில் தான்
பள்ளி சென்று படித்திட ஏழைப்
பிள்ளைகளுக்கு தோதில்லை ஏன்??

காசாகிப் போனது கல்வி வியாபாரம்
கல்விக்கு கண் திறந்த
காமராசர் சொன்னது பரிதாபம்

கொள்ளியிட்டு கொல்கிறது
ஏழையின் வாழ்வாதாரம்
காரணம் இதற்கு
கொல்லையிலே போன அரசாங்கம்..!!

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்