கேட்டது மனட்சாட்சி….!கவிதை.ரதிமோ

 

வன்னிமண்ணை பார்த்தாயா
வலைஞர் மடத்தை அறிந்தாயா
கந்தக புகையை நுகர்ந்தாயா
அழுகுரல்களை கேட்டாயா…

நந்திக்கடலில் இரத்த ஆறு
ஓடியதைப் பார்த்தாயா
கன்னியர்களை துகிலுரித்த
காடைத்தனத்தை அறிந்தாயா

பச்சிளக்குழந்தைகள் கர்ப்பிணிகள்
பாரபட்சமின்றி துண்டாக்கப்பட்டதை
உந்தன் கண்கள் காணவில்லை
கொத்துக்குண்டுகள் வெடித்ததை பார்க்கவில்லை..

போராட்ட சங்கதி நீ அறியாய்
பசி பட்டினி உனக்குப்புரியாது
கேட்டது மனட்சாட்சி கோபமாக
நியாயமான கேள்விதான் என்றபோதும்..,

கோபத்தில் வார்த்தைகள் தடுமாறின
வன்னிபார்க்கவில்லைதான் போராடவில்லைதான் ஆனால்
உணர்வு தமிழ் உணர்வுள்ள தமிழிச்சியாய் அழுகின்றது மனசு
சாந்தி சாந்தி ஆத்ம சாந்தி…

அவல குரலெழுப்பி மாண்டுபோன உயிர்களே தமிழ் சொத்துக்களே
சர்வதேசமும் கண்மூடிஇருந்த
கொடுமையை எப்படி உரைப்பேன்..

ஆக்கம் ரதிமோகன்

Merken