பரவியதா? பரப்பியதா?


ஆயிரம் கதைப் பூக்கள் சூட்டிய
மாலைகளை அணிவிக்குது கொடுங் கரம்.
அசுரக் காற்றாய் பரவும் பிணியை
ஆழம் அறியத் துடிக்குது மருத்துவ அகம்.
ஆணவப் பேய்களின் வைரஸ் விதைப்பில்
உயிர்க் கொடைகளின் உயர்வு இடியானது.
ஆத்ம உணர்விலே ஆணி அறைந்தாலும்
உன்னத நடைகளும் கண்காண மடியானது.
அவசர உலகத்தில் அலைந்து பறந்த
மனிதம் வாழ்வை அடை காக்கிறது.
அண்ணன் தம்பி அக்காளின் பாசம்
அழகிய அலையாய் கரை தழுவுகிறது
எல்லோரும் ஒன்றாகக் கூடி உண்ணும்
அழகு தோப்பாய் முகம் சிரிக்கிறது.
எண்ணங்கள் உயர்ந்திட ஏணியான
கொலைகார வைரஸ்சை மனம் சிந்திக்கிறது.
அவர் செய்த மமதைக்கு யாரை யார் நோக
பழி வாங்கல் தொடரும் அதையும் பார்போம்.
அழகிய பூமியின் அமைதியை முத்தமிட்ட
இயற்கையின் இதயத்தை மனசோடு ஏற்போம்.
இனிவரும் காலங்கள் எதை எதைச் செய்யும்
கிருமிக் கைகள் ஒப்பந்தம் குலுக்கும்.
இயற்கை தான் மனிதனின் இறை எனும் இதயம்
அதை உணர்ந்தவர் வாழ்வே நிலைக்கும்…
கலைப்பரிதி.