****போகும் காலம் *****

பட்டு மேனிதான் பாழ்பட்டின்று,
பருத்தி நாராய் போகட்டுமே!
கட்டு உடல் நலிந்து உந்தனிளம்,
கவர்ச்சிதான் குன்றித்தீரட்டுமே!
கெட்டு நாமும் எங்கள் வாழ்வில்,
கேட்பாரற்றுத்தான் கிடந்த போதும்,
தொட்டு உணரும் எந்தன் கரத்தின்
தொடுகை போதுமையா எமக்கு,
எட்டு அடுக்கு மாளிகையின் நல்ல
எழில்மிகு பஞ்சனையாகிடும் நமக்கு,
திட்டுவேன் சிலவேளைகளில் உமக்கு
திமிர் கொண்ட என் வெறும்வாயால்.
சொட்டு அளவேனும் உம்மை நான்,
சோதிக்க எண்ணியதில்லை, மனதில்
இட்டு வைத்தாய் நீயுமென் நெற்றியில்,
இனிதான ஒரு நன்னாளிலே , அந்த
பொட்டு, என்றுமே நிலைக்கட்டும், என்
போகும் காலம் வரும் மட்டும் .

பொட்டுநேசன்