காற்றின் இசை

மௌன அமைதி
தூங்கி வழிந்த
என் அறையில்
காற்றின் இசை
மெல்லப் பரவியது..

என் தொடர் தூக்கத்திற்குத்
தாலாட்டுப் பாடி
என் கன்னத்தை உரசி
காதல் கவிதை சொன்னது..

என் காதோரத்தில்
மெல்லிய குரலில்
காதல் இசை பாடி
கிளுகிளுப்பூட்டியது..

காற்று
என் உதடுகளைத் தடவி
இன்ப உணர்வைப் பரப்பி
முத்தமிட்டது
என் இமைகளில் ஊடுருவி
கண் சிமிட்டச் செய்தது…

காற்று
என் மெல்லிய இதயத்தில்
சொர்க்க இசையைப் புகுத்தியது
புல்லாங்குழல் இன்றி
அது எழுப்பிய இசை
என் சோம்பிய உணர்வுகளைத்
தட்டி சுகமூட்டியது..!

காற்றின் சுவாசம்
கடவுளின் வாசம்
காற்றின் தொடுதல்
கடவுளின் வருடல்
காற்றின் இசை
கடவுளின் ஓசை!
**
சத்யா பிரான்சிஸ்