காற்றின் கதவுகளுக்குள்
நின்றுவிடுவதற்காகவா
காட்டாறுகளை கடந்து வந்தோம்
பள்ளங்களில் இருக்கும் நீருக்கு
சுவையிருக்கலாம்
ஒரு மாம்சத்தின் பிசுபிசுப்பின்
மாறாத் திரவமாய் மாற்றப்பட்டிருக்கும்
எங்கள் நிலங்களின் நீர்
காலகாலமாய்
கேட்ட பனைக்கீற்று இராகங்களில்
பரிதவிக்கும் ஆத்ம ஓலங்களை
எப்படி புறக்கணித்து உறங்குவது..?
இந்த நிலத்துள் மக்காதிருக்கும்
மழலை என்புகளை
எம் பேரர்களின் உழவு இயந்திரங்கள்
உடைத்தழிக்கவிருப்பதை
பார்ப்பதற்காகத்தானா இந்தப் பேரமைதி..?
மேலிருந்து வீழும்
மழைத்துளிகளின் தயவில்
முளைத்தவாறுதான் இருக்கிறது
அவர்களின் உயிர்கள்
நாங்களை
அவற்றை புறக்கணிக்கிறோம்
அவற்றை மிதிக்கிறோம்
ஆம் நாங்கள்
புதிய முகம் தரித்த மிருகங்களாகிவிட்டோம்