முக(ம்)மூடி இல்லை….!கவிதை கவித்தென்றல் ஏரூர்

வினா எழுப்பும் விடியலோடு
கண்ணீர் பூக்களை பூக்குகிறாள்
கனாக் காணும் கண்களுக்கு பார்வையில்லை
இவள் பூக்கும் பூக்களுக்கு நிறங்களில்லை

இவள் கண்ணீரை சேமித்து இருந்தால்
கங்கையாகி இருக்கும்
கண்ணீருக்கு சாயம் இருந்தால்
கன்னங்களில் தேங்கி இருந்து
காயமாகிருக்கும்

இவளின் கற்புக்கு ஆடை தரித்திட
அவதரித்தவர் யாருமில்லை
இரவு நெருப்பில் வேகும் இவள் உணர்வுக்கும்
உயிரிருக்குமென்று உணர்ந்தவர் எவருமில்லை

வயது முதிர்ந்து பூக்கள் வாடுவதில்லை
வரையறையென்று வாழ்க்கை பெண்ணின் நிலை
சதையை மட்டும் தாரவார்க்கும் வேடாதாரிக்கும்
வதையைக் கொடுக்கும் இந்த கேடுகெட்ட சமூகம்

போலி முகங்களில்லாத பூக்கள்
முகமூடியில்லாத காயப் பட்ட நகையுடன் பூமியில்…
உள்ளக் குமுறலில் உருவெடுத்து தனிமைத் தீவில்
உயிரைப் பணயம் வைக்கும் நரக வாழ்வில்…

ஆக்கம் கவித்தென்றல் ஏரூர்