வளைவில் முடிவில்லை !கவிதை மீரா,ஜெர்மனி

விழி மூட மறுத்து தூக்கம் தொலைந்து
விடிய விடிய காத்திருந்து
சயனம் எட்டிப்பார்த்த வேளை
வெள்ளி வெளுத்து தூக்கம் கலைந்தேன்

மறந்து போன வரிகளை மனப்பாடம் செய்து
தன்னம்பிக்கை வரவழைத்து
மேடை ஏற நினைத்தேன்
ஆனால் அடுத்த காட்சி மாறக் கண்டேன்

அழுதழுது முடிந்த கண்களில்
வற்றிய நீர்த்துளிகளை துடைத்தெறிந்து
நிமிர்ந்தேன், ஆனால் தோள் கொடுக்க
ஆறுதல் தட்டிக் கொடுக்க காத்திருந்தது கண்டேன்

உலகை வெறுத்து ஆசை அன்பு
வெளிவேஷம் என்றேன்
ஆனால் உண்மை பாசம்
நட்பு கரம் நீட்டி ஓரமாய்
காத்திருந்தது கண்டு மலைத்தேன்

எல்லாம் முடிந்தது என்ற வரைவிலக்கணம்
இங்கே எல்லாமே பொய்யானது
வளைவில் முடிவு இல்லை
அடுத்த வழிப்பாதையின் தொடக்கமே
நாம் வாழும் வாழ்வானது
உணர்ந்தேன், தெளிந்தேன்

வெற்றிகள் என்னை உலகுக்கு இனம் காட்டியது
தோல்விகள் உலகை எனக்கு இனம் காட்டியது

மீரா ஜெர்மனி