வாடி நிற்கும் வாடா மல்லி


பூத்துக் குலுங்கி,நானும் வாழ்வில் மலர்ந்து,
புது மனம் வீசிய காலமெல்லாம் போனதே .
பாத்துப்பாத்து பணிவிடை செய்தேன்,அன்று,
பாதியிலே கணவனும் பரமனடி சேர்ந்தான்.
காத்து வளர்த்த கண்மணிகள் எனைமறந்து ,
கன்னிகள் கைவசமாகியே, எனைக்கைகழுவினர்.
நேத்து வந்தவளே வாழ்வில் நிரந்தரமெனக்கூறி.
நோகடித்துமே என்னைத்,தெருவில் விட்டனர் .
மாத்துத் துணிக்கு மட்டுமல்லாது இந்த வயதில்
மற்றவேளை சோத்துக்கும் சேர்த்து உழைக்கிறேன் ,
பூத்த மல்லி கோர்த்து விற்கும் பூக்காரியாகியே
பூவைப்போல நானும் இங்கு வாடி நிற்கிறேன்.
பூநேசன்